ஆப்நகரம்

திமுக.,வை நம்பினால் எதிர்காலம் இல்லை; ஜெ., தாக்கு

திமுக.,வை நம்பி, வரும் தேர்தலில் வாக்களித்தால், தமிழக மக்களுக்கு எதிர்காலமே கிடையாது என, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

TOI Contributor 12 May 2016, 5:40 pm
திமுக.,வை நம்பி, வரும் தேர்தலில் வாக்களித்தால், தமிழக மக்களுக்கு எதிர்காலமே கிடையாது என, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
Samayam Tamil dont believe in dmk jayalalithaa attacks
திமுக.,வை நம்பினால் எதிர்காலம் இல்லை; ஜெ., தாக்கு


திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று ஜெயலலிதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

முல்லை பெரியாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நதிநீர் விவகாரம் போன்றவற்றில், தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு நிலைநாட்டியுள்ளது. இதேபோல, இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டுவந்தோம். மின்சார தட்டுப்பாட்டில் இருந்தும் தமிழகத்தை மீட்டுள்ளோம்.

தமிழகம் முழுவதும் ஏராளமான புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளோம். ஆனால், மக்கள் நலனில் திமுக என்றைக்குமே, விரோதமாகச் செயல்பட்ட கட்சி. அவர்களின் ஆட்சிக் காலத்தில், பொதுமக்களின் நிலம் ஏராளமாக அபகரிக்கப்பட்டன. நிலம் வைத்திருந்தவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாகினர். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் சொத்துகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஏராளமான ஊழல்களை புரிந்தவர்கள் திமுக தலைவர் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும். சுய நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் கருணாநிதி, தமிழகத்தை எவ்வாறு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்?. திமுக.,வுக்கு வாக்களித்தால், தமிழகத்தின் எதிர்காலம் மீண்டும் கேள்விக்குறியாகி விடும்.

குடும்ப நலனுக்காகப் பாடுபடும் திமுக.,வை புறக்கணித்து, மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுக.,வை ஆதரிக்க வேண்டும். தாய் உள்ளத்தோடு, ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளேன். அவற்றை, ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்துவேன். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர அதிமுக., வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி, கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

அடுத்த செய்தி