ஆப்நகரம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறமாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 2 Sep 2020, 7:58 pm
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெற்றது.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்


அதன்படி, சுமார் 1,58,333 லட்சம் மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பொறியியல் படிப்பிற்கு கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து சுமார் 1,60,834 மாணவர்கள் கலந்தாய்விற்கு பதிவு செய்துள்ளனர். 1,31,436 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1,31,436 பேருக்கான ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

செமஸ்டர் வகுப்புகள் தொடக்கம் எப்போது... கால அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

தமிழகத்தில், இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம், 500க்கும் மேற்பட்ட பொறியியில் கல்லூரிகளில் உள்ள 2.64 லட்சம் இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.50 லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் இடங்கள் நிரப்பப்படாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

அண்ணா பல்கலை. அறிவிப்பு


இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறமாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பி.இ, பி.டெக், எம்.சி.ஏ, பி.ஆர்க் ஆகிய பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்திற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி