ஆப்நகரம்

Vidyarambham: விஜயதசமியில் கல்வி கற்கத் தொடங்கிய குழந்தைகள்.. நெல்மணியில் ‘அ’ எழுதினர்..

தமிழகத்தில் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு பள்ளிகளில் சிறப்பு அட்மிஷனும், கோயில்களில் திருஏடு ஆரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குழந்தைகள் நெல்மணியில் 'அ' எழுதி கல்வி கற்கத் தொடங்கினர்.

Samayam Tamil 8 Oct 2019, 12:03 pm
விஜயதசமியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு கோயில்களில் திருஏடு ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை நெல்மணியில் ‘அ’ எழுத்து எழுத வைத்து, கல்வி கற்க தொடக்கி வைத்தனர்.
Samayam Tamil vijayadashami vidyarambham


விஜயதசமி நாளில் கல்வி கற்க தொடங்கினால், குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது ஐதீகம். அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருஏடு ஆரம்பம் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

(பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி)


சென்னையில் அண்ணாநகர், மகாலிங்க புரம் உள்ளிட்ட முக்கிய ஐயப்பன் கோயில்களில் திருஏடு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காலை முதலே கோயில்களில் திரண்டனர். திருஏடு தொடக்கத்தின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு முன்பு தாம்பூலத்தில் நெல்மணி, பச்சரிசி வைக்கப்பட்டது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு, நெல்மணியில் தாய்மொழி தமிழ்மொழியின் முதல் எழுத்தான. ‘அ’ எழுத வைத்து கல்வி கற்கத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து பூசாரிகள் தங்க மோதரம், தங்க ஊசியைக் கொண்ட குழந்தைகளின் நாவில் ‘அ’ எழுதினர்.

மற்ற மொழி இனத்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரவர் தாய்மொழியின் முதல் எழுத்தைக் குழந்தைகளை எழுத வைத்தனர். தொடர்ந்து, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என உறவுகள் பெயர்கள் அனைத்தையும் குழந்தைகளை எழுத வைத்தனர்.

மேலும், பல அரசு தொடக்கப்பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அரசுப்பள்ளிகளில் இன்று சேர்ந்த குழந்தைகளை, ஆசிரியர்கள் அன்புடன் அரவணைத்து வரவேற்று, அரிசிமணியில் அகரத்தை எழுத வைத்தனர்.

2020ம் ஆண்டில் எக்கச்சக்க மத்திய அரசு வேலை.. இதோ SSC யின் முழு தேர்வு அட்டவணை!

அடுத்த செய்தி