ஆப்நகரம்

குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: நீதிபதிகள் முன்பு டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்!

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஒப்புக்கொண்டுள்ளது.

Samayam Tamil 13 Jun 2019, 12:59 pm
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.
Samayam Tamil tnpsc office


அரசுத் துறையில் சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பிரிவுகளில் 139 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக கடந்த மார்ச் மாதம் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3ம் தேதி வெளியான நிலையில், குரூப் 1 தேர்வு எழுதிய விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதில், 'தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் குரூப் 1 தேர்வு எழுதினர். ஏப்ரல் 3ம் தேதி குரூப் 1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவில், 950 பேர் குரூப் 1 மெயின் தேர்வுக்கு தேர்வானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவில் தேர்வர்களின் பெயர், பாலினம், பிரிவு என முக்கிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே, குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று விக்னேஷ் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால் குரூப் 1 தேர்வுக்கு தடைவிதிக்கப் போவதாக நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர் நேற்று மதியம் உடனே ஆஜராகி, சொந்த வேலை காரணமாக காலை வரமுடியவில்லை என்று விளக்கமளித்தார். பிறகு இந்த வழக்கு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். குறிப்பாக நீதித்துறை தொடர்பான கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது. இதனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுாது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். அப்போது, குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி.,யின் இந்த ஒப்புதலைக் கேட்ட நீதிபதிகள், 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது என்று சர்வ சாதாரணமாக கூறுவதை ஏற்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி