ஆப்நகரம்

தேர்வில் காப்பியடித்த 41 மாணவர்கள்.. 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை!

ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் உதவியுடன் 41 மாணவர்கள் காப்பியடித்தாக, இரண்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Oct 2019, 2:23 pm
தேர்வு கண்காணிப்பாளர்கள் உதவியுடன் மாணவர்கள் காப்பியடித்ததாக, இரண்டு மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தடை விதித்து டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil mgr university


இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

அண்மையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தமிழக மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு சம்பவத்தை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், மருத்துவக்கல்லூரியில் செமஸ்டர் தேர்வில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்துக் உட்பட்ட கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து, வகுப்புகள் தொடங்கி முதல் பருவத்தேர்வுகள் (செமஸ்டர்) கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில், மாதா மருத்துவக்கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் சுமார் 41 மாணவர்கள், தேர்வு கண்காணிப்பாளர்களின் உதவியோடு காப்பியடித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமரா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் www.tnmgrmu.ac.in விசாரணை நடத்தி இரண்டு கல்லூரிகளின் வளாகத்திலும் செமஸ்டர் தேர்வு நடத்த தடைவிதித்துள்ளது. மேலும், 41 மாணவர்களும் மீண்டும் செமஸ்ட்ர் தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மறுதேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரம் முடிவதற்குள்ளாகவே, தனியார் மருத்துவக்கல்லூரி செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் விடைகளை கேட்டு எழுதுவதும், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்வதுமான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களின் முறைகேடு நடவடிக்கைக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர்களே உதவிகரமாக இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி