ஆப்நகரம்

திருநங்கை தமிழ்ச்செல்விக்கு நர்சிங் படிப்பில் இடம் ஒதுக்கீடு!

திருநங்கை தமிழ்ச்செல்விக்கு, நர்சிங் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2022, 10:29 am
மனித உரிமை ஆணையத்தின் உத்தரவையடுத்து, திருநங்கை தமிழ்ச்செல்விக்கு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil nurse degree course
nursing courses list


வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.தமிழ்ச்செல்வி(22). திருநங்கையான இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 74 சதவீத மதிப்பெண் பெற்றார். இதையடுத்து, அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார்.

ஆனால் திருநங்கை எனக்கூறி மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து, திருநங்கை தமிழ்ச்செல்வி மருத்துவக்கல்வி இயக்குனர், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், இந்திய நர்சிங் கவுன்சில் ஆகியவற்றில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை.

இதனால் மனமுடைந்த அவர் நர்சிங் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கொடுங்கள். இல்லையென்றால் கருணை கொலைக்கு அனுமதியுங்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு மனு அனுப்பினார்.

இதை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் திருநங்கை தமிழ்செல்விக்கு டிப்ளமோ நர்சிங் படிக்க இடம் ஒதுக்க உத்தரவிட்டார்.

அவரது உத்தரவில், திருநங்கை என்பதற்காக தமிழ்ச்செல்வியின் கல்வி உரிமையை மறுப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, தமிழ்ச்செல்வி விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அவர் நர்சிங் படிப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், 2018-19-ஆம் கல்வி ஆண்டிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படிப்பில் தமிழ்ச்செல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, நீதிபதி டி.ஜெயச்சந்திரனை திருநங்கை தமிழ்ச்செல்வி சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு நர்சிங் படிக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி