ஆப்நகரம்

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியானது பாஜக; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்-மஜத கூட்டணி!

கர்நாடக சட்டசபை தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 15 May 2018, 11:02 pm
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Results


கடந்த 12ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்தது. ஒருகட்டத்தில் 120க்கும் அதிகமாக தொகுதிகளைப் பெற்று, பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றது.

பின்னர் படிப்படியாக குறைந்து, 103 தொகுதிகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய ஹூப்ளி தர்வாத் தொகுதியில் பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டரின் வெற்றி அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தேர்தல் முடிவு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்தால் பாஜக மொத்தம் 104 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37, இதர கட்சிகள் 3ல் வெற்றி பெற்றுள்ளன. ஜெயா நகர், ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் ராஜராஜேஸ்வரி நகருக்கு வரும் 28ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாக்குகள் வரும் 31ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்கத் தேவையான 113 தொகுதிகளை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.

இந்த சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க, காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. ஆனால் அதிக தொகுதிகளைப் பெற்ற பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில், ஆளுநரை எடியூரப்பா சந்தித்தார்.

அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரியதில், 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் - மஜத கூட்டணியினர் ஆளுநரைச் சந்தித்து பேசினர்.

இதுவரை யார் ஆட்சி அமைப்பார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karnataka Assembly Elections results final tally.

அடுத்த செய்தி