ஆப்நகரம்

Ashok Gehlot: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வரலாறு

ராஜஸ்தான் மாநிலத்தின் 14வது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டின் அரசியல் பயணம். மூன்றாவது முறையாக இவர் அந்த மாநிலத்தின் முதல்வராகிறார்.

Samayam Tamil 14 Dec 2018, 4:53 pm
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தெரிந்தன. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
Samayam Tamil Ashok-Gehlot-770x433


ராஜஸ்தானில் அந்த மாநிலக் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் இடையே போட்டி ஏற்பட்டது. முடிவில், அசோக் கெலாட் முதல்வராக பதவி ஏற்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

67 வயதான இவர் ராஜஸ்தானில் 14வது முதல்வராக பதவியேற்க இருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் சர்தார்புரா தொகுதியில் பாஜக வேட்பாளர் சம்பு சிங்கை தோற்கடித்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார்.

மூன்றாவது முறையாக ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்கும் அசோக் கெலாட், இதற்கு முன் முதலில் 1998 முதல் 2003 வரையிலும் பின் 2008 முதல் 2013 வரையிலும் பதவி வகித்துள்ளார்.

1982 முதல் 1985 வரை ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் மத்திய சுற்றுலா மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். சில அந்த காலத்தில் மாதங்கள் விளையாட்டுத்துறையும் கவனித்துள்ளார். 1991 முதல் 1993 வரை நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார். 1980 முதல் 1999 வரை ஐந்து முறை எம்.பி.யாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

2004 முதல் 2008 வரையும் பின் 2017 முதல் தற்போது வரையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் 1951ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி லக்ஷ்மண் சிங் கெலட்டிற்கு மகனாகப் பிறந்தார். அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பொருளியலில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். இளமை முதலே அரசியலில் ஈடுபாடு கொண்ட கெலட் மகாத்மா காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். 1971ல் கிழக்கு வங்க அகதிகளுக்கு தங்கும் முகாம்களை ஏற்படுத்திக்கொடுத்து சேவை செய்தார். அந்த முகாம்களில் ஒன்றுக்கு வருகை தந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது சேவையைப் பாராட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் அமைந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் யூனியனுக்கு முதல் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சர்வதேச பத்திரிகையாளர்களின் அமைப்பான ஐ.சி.ஐ.ஜே. வெளியிட்ட பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழல் பிரமுகர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கமிட்டி தரப்பில் நடத்திய விசாரணைக்குப் பின் இவர் மீதான குற்றத்துக்கு ஆதாரம் இல்லை என முடிவுசெய்துவிட்டது.

அடுத்த செய்தி