ஆப்நகரம்

4 தொகுதி இடைத்தேர்தல் - யாருக்கு வாய்ப்பு? தொடங்கியது அதிமுக நேர்காணல்!

அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கு நேர்காணல் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 21 Apr 2019, 7:36 pm
தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
Samayam Tamil EPS OPS Interview


அவை சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகியவை ஆகும். இதற்கான வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களுக்கு இன்று காலை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை பூர்த்தி செய்து, இன்றே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட 300 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இவற்றுக்கான நேர்காணல் இன்றே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ளது.

இது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி