ஆப்நகரம்

எடப்பாடிக்கே சவால் விட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் முதல்வர் பழனிசாமிக்கே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

Samayam Tamil 16 May 2019, 12:40 pm
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதிகளில் 6ல் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று முதல்வர் பழனிசாமிக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Palaniswami Senthil Balaji


எனவே மீதமுள்ள 4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 2ல் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்று அமைச்சரவை சகாக்களிடம் முதல்வர் பழனிசாமி கண்டிப்பாக கூறியுள்ளார்.

இதையடுத்து 4 தொகுதி பிரச்சாரத்தில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.

தாய்க் கழகத்திற்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுநாள் வரை கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த வலிமையான தலைவர்கள் யாரும் திமுகவிற்கு இல்லாததால், மேற்கு மாவட்டங்களில் அதிமுக மிகுந்த செல்வாக்குடன் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அந்த சமூகத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி தற்போது திமுக பக்கம் சென்றுள்ளார். எனவே வரும் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுவிட்டால், அது இனிவரும் காலங்களில் திமுகவின் கோட்டையாக மாறிவிடும்.

ஆகையால் அரவக்குறிச்சி தொகுதியில் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் ஆகியோர் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உறுதுணையாக வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கே.சி.கருப்பண்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய செயலாளர்களும் களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூ.3,000 கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு போட்டியாக ஓட்டுக்கு ரூ.4,000 கொடுத்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் பழனிசாமிக்கே சவால் விடும் வகையில் செந்தில் பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் தொகுதியில் பெரும் பணப்புழக்கம் இருப்பது கண்கூடாகத் தெரிவதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி