ஆப்நகரம்

அதிகரிக்கும் பணப்பட்டுவாடா; இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி!

பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால், இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 15 May 2019, 1:56 pm
மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"திருப்பரங்குன்றம் தொகுதியில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Samayam Tamil Madurai High Court.


இதற்காக பல்வேறு கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், வாக்குகளுக்காக பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காக பணம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்கின்றனர்.

ஒருவருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கொடுத்து அரசு பேருந்துகளில், ஷேர் ஆட்டோக்கள், மினி லாரி ஆகியவற்றில் அழைத்துச் செல்கின்றனர். தேர்தல் பரப்புரைகளில் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக மட்டும், முக்கிய கட்சிகள் இதுவரை 25 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குக்கு பணம் கொடுப்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திமுக, அம்மா முன்னேற்றக் கழகம், அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இச்சூழலில் தேர்தல் செலவு கணக்கு என பொய்யான கணக்கை தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

தேர்தல் ஆணையமும் கண்மூடித்தனமாக அதனை ஏற்றுக் கொள்கிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை.

எனவே திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.

தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி