ஆப்நகரம்

அமமுகவில் விழப் போகும் அடுத்த முக்கிய விக்கெட்; டிடிவியே போட்டு உடைத்த ரகசியம்!

டிடிவி தினகரன் கட்சியில் இருந்து அடுத்து யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Samayam Tamil 2 Jun 2019, 8:21 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். இதனால் சசிகலாவின் அதிரடியால் ஈபிஎஸ் ஆட்சி பீடத்திற்கு வந்தார். அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர, சசிகலா சிறைக்கு சென்றார். ஒருகட்டத்தில் ஈபிஎஸ் தரப்பு சசிகலாவை ஒதுக்கி வைக்கத் தொடங்கியது.
Samayam Tamil TTV


இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட, அதிமுக ஒன்றிணைந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் ஆச்சரியம் தரும் வகையில், டிடிவி தினகரன் தலைமையில் தனி அணி உருவானது. இவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி பெற்று, அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார்.

அவர் மீதான ஈர்ப்பால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர், அமமுகவிற்கு தாவத் தொடங்கினர். இதனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, பரபரப்பு கிளம்பியது. இதையடுத்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் திமுகவிற்கு தாவத் தொடங்கினர்.

இது டிடிவி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் 17வது மக்களவைக்கான தேர்தல், தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தது. அமமுகவில் சார்பில் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டுமெனில், கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதனால் டிடிவி தினகரன் ஆரம்பித்த கழகம் கட்சியாக உருமாறியது. மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு டிடிவி தினகரன் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லுமிடமெங்கும் கூட்டம் அலைமோதியது.

கூடிய கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறும் என்று எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அமமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. திராவிடக் கட்சிகளைத் தொடர்ந்து 3வது இடம் கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றிக்காக பணத்தை வாரி, வாரி இறைத்த அமமுக பிரமுகர்கள் பலரும் செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கின்றனர். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனை தமிழக மக்கள் அங்கீகரிக்க வில்லை என்பதைக் காட்டுகிறது. இனி எதற்காக அமமுகவில் இருக்க வேண்டும் என்று சிலர் கட்சி மாற தயாராகி வருகின்றனர். எதற்காக திமுகவிற்கு செல்ல வேண்டும். பேசாமல் தாய் வீடான அதிமுகவிற்கு சென்று விடலாம் என்று எண்ணுகின்றனர்.

இந்தப் பட்டியலில் முதல் ஆளாய், கட்சி மாறியது தங்கதமிழ்ச் செல்வனின் வலது கரமான திகழ்ந்த அருண் குமார். இவர் திடீரென தனது ஆதரவாளர்களுடன், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதனால் டிடிவி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே அமமுக தென்மண்டல பொறுப்பாளர் ஆர்.பி.ஆதித்தன், அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தங்க தமிழ்ச்செல்வனும் அணி மாறக் கூடும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்ற போது, தங்கதமிழ்ச்செல்வன் போகவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கட்சியில் இருந்து சிலர் போகலாம். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். இவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று யோசிக்கையில், தங்கதமிழ்ச்செல்வன் ஆக இருக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி