ஆப்நகரம்

ஆரம்பமே அதிமுகவிற்கு சிக்கலா? தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய திருப்பூர் வேட்பாளர்!

திருப்பூர் அதிமுக வேட்பாளர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 19 Mar 2019, 9:18 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பல்வேறு கட்சிகளும் வெளியிட்டுள்ளன.
Samayam Tamil Tiruppur


அதன்படி, திருப்பூர் மக்களவை தொகுதிக்கு அதிமுக சார்பில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவருக்கு திருப்பூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன், முதலில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் தொழில் சார்ந்த பகுதி.

ஆண்டிற்கு ரூ.25,000 கோடி அளவு அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிறது. இதனை மேம்படுத்தவே எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றன.

அதன் சாதனைகளை எடுத்துக் கூறி, மக்கள் செல்வாக்கைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று கூறினார். தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன்படி, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி