ஆப்நகரம்

ஜெ.,வால் ஒதுக்கப்பட்டவரை ஆதரிக்கும் ஈபிஎஸ்; அதிமுகவினர் அதிருப்தி

`மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, திருவண்ணாமலை எம்.பி தொகுதிக்கு ‘சீட்’ கொடுத்து அழகு பார்க்கிறார்கள். முதல்வரும், துணை முதல்வரும்” என்று புலம்புகிறனர் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலர்.

Samayam Tamil 20 Mar 2019, 6:12 pm
`மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, திருவண்ணாமலை எம்.பி தொகுதிக்கு ‘சீட்’ கொடுத்து அழகு பார்க்கிறார்கள். முதல்வரும், துணை முதல்வரும்” என்று புலம்புகிறனர் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலர்.
Samayam Tamil agri krishnamoorthy


வேளாண்மைத் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக ஏழு பேரைத் தேர்வு செய்வதற்கான உத்தரவை, நேர்மையாக அமல்படுத்த முயற்சி செய்ததால், திருநெல்வேலி மாவட்ட உதவிச் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, 2015 பிப்ரவரி மாதம் 20-ம் தேதி ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு, அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமுர்த்தியின் குடைச்சல்தான் காரணம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தகவல் சொன்னது உளவுத்துறை. உடனே அக்ரி கிருஷ்ணமுர்த்தியின் அமைச்சர் பதவியும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் பறித்துக்கொண்டு, அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.

அதோடு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் பேசக்கூடாது என்றார். அந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமுர்த்தி கைது செய்யப்பட்டார். அதன்பின் 2016 மார்ச் மாதம் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும், கட்சியில் அக்ரி கிருஷ்ணமுர்த்தியைச் சேர்க்கவில்லை ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதா அம்மாவால் ஓரங்கட்டப்பட்டவருக்கு சீட் கொடுத்து இருக்கிறார்கள் இவர்கள் என்று புலம்புகின்றனர் திருவண்ணாமலை அ.தி.மு.க நிர்வாகிகள்.

இதுகுறித்து அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் கூறுகையில், `திருவண்ணாமலை வடக்கு அ.தி.மு.க, மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அணி, பெருமாள் நகர் ராஜன் அணி, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் அணி. இந்த மூன்று அணிகளும் எப்போதும் எலியும் பூனையுமாக சண்டைபோட்டுக்கொண்டே இருப்பவர்கள். தொண்டர்களுக்கு அக்ரி பிரியாணி போட்டால், ராஜன் வடை பாயசத்தோடு விருந்து கொடுப்பார்.

இவர்களுக்கு ஒருபடி மேலே சென்று உயிரோடு கோழியையும் அரிசியையும் கொடுத்து குடும்பத்தோடு சமைத்துச் சாப்பிடுங்கள் என்பார் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம். இந்த மூன்று அணிகளுமே எம்.பி.சீட் வாங்க முட்டி மோதியது தலைமையிடத்தில். இதில் அக்ரிக்கு சீட் கொடுக்கப்பட்டதால் மற்ற இரண்டு அணிகளும் ஏகபோக கடுப்பில் உள்ளனர்.
‘நரகாசூரன் அக்ரிக்கு ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லமாட்டோம்’ என்று இரு அணிகளுமே வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

அக்ரி அமைச்சராக இருந்தபோது, அரசியல் ஆதாயத்துக்காகப் பல முக்கிய நிர்வாகிகளை வளரவிடாமல் தடுத்தவர். அக்ரிக்குப் பிறகு, ராஜன் மாவட்டச் செயலாளர் ஆனார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்ரி, அ.தி.மு.க தலைமையில் பேசி அந்த பொறுப்பை பிடுங்கி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கொடுத்துவிட்டார். அக்ரிக்குச் சொந்த ஊர் கலசப்பாக்கம் தொகுதியில் வருகிறது. அதனால், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் வளர்ச்சியை முழுமையாகவே தடுத்துவிட்டார்.

தன்னைவிட யாரும் உயரத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்று யாரையுமே வளரவிடாமல் தடுத்து அழித்தவர் அக்ரி என்கின்றனர் தொண்டர்கள். இந்தச் சம்பவங்கள் நடந்தது எல்லாமே, ஜெயலலிதா கட்சியை விட்டு வெளியே அனுப்பிய பிறகு, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தவை. இதனால் நாங்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஓட்டு கேட்க போகமாட்டோம் என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.

இரண்டு அணியைச்சேர்ந்தவர்களும். இதுபோக இப்போது புதியதாக சிட்டிங் எம்.பி வனரோஜா ஒரு அணியாகச் செயல்படத் தொடங்கிவிட்டார். வனரோஜாவுக்கு சீட் கொடுக்காததால், அவர் ஒரு பக்கமாக புகைந்துகொண்டு இருக்கிறார்.

அடுத்த செய்தி