ஆப்நகரம்

என்ன காரணமா இருக்கும்? வண்டியை நிறுத்தாம வேகமா ஓட்டிட்டு போன டிடிவி மீது வழக்கு!

தேர்தல் பறக்கும் படையை மதிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் டிடிவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Apr 2019, 9:08 pm
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil TTV


இந்நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கடந்த மார்ச் 31ஆம் தேதி தனது கட்சி வேட்பாளரான கோமுகி மணியனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, கள்ளக்குறிச்சி தொகுதியில் இருந்து அயோத்தியாபட்டினம் வந்துள்ளார்.

இதற்கிடையில் அச்சன்குட்டப்பட்டி அருகே சென்ற போது, டிடிவி தினகரனின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் உடனே வாகனத்தின் வேகத்தைக் கூட்டி சென்றுள்ளார்.

அவரது வாகனத்துடன் சென்ற 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் வேகமாக சென்றுவிட்டன. இதுகுறித்து கள்ளக்குறிச்சி தேர்தல் அதிகாரியும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான எல்.சுப்பிரமணியனிடம், பறக்கும் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், டிடிவி தினகரன் மீது பறக்கும் படை அதிகாரி மணிமேகலை வீராணம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தங்கள் மேலதிகாரியிடன் போலீசார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது இந்திய தண்டனைச் சட்டம் 188, 132, 177 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி