ஆப்நகரம்

சமூகவலைத்தளத்தில் ரெடியாகும் ஆப்பு - அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிடும் சர்ச்சை பேச்சுகள்!

மாறி, மாறி வைக்கும் கூட்டணியாலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் தலைவர்கள் வசமாக சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

Samayam Tamil 28 Mar 2019, 8:43 am
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதேநாளில் தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எப்போதோ பேசிய சர்ச்சை பேச்சு, பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக மாறியுள்ளது.
Samayam Tamil Anbumani


இதற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள் தான். ஊர், ஊராக கட்சியினர் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்னரே, அவர்கள் பேசிய சர்ச்சை பேச்சுகள் சமூக வலைத்தளங்கள் மூலம் சென்றுவிடுகின்றன. உதாரணமாக, ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த பாமக, வரும் மக்களவை தேர்தலுக்காக அக்கட்சியுடனே கூட்டணி அமைத்துள்ளது.

அதிலும், அன்புமணி பேசிய “டயர்நக்கி” என்ற வார்த்தை மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயதியும் தாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் தவறாமல் பயன்படுத்தி விடுகின்றனர். இதன்மூலம் ஆளும் கட்சி, பாமக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு, சமூக வலைத்தளத்தில் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் பேசிய மேடை பேச்சும் வைரலாகி வருகிறது. அதாவது, ”முக்குலத்தோராக இருந்தவர்கள் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்” என்று ஒருமுறை பேசியுள்ளார். இதனை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இது சாதி ரீதியிலான பேச்சு என்பதால், பிற சாதியினரின் வாக்குகள் ரவீந்திரநாத்திற்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ”நாம் ஆட்சிக்கு வந்தாலும், பழி வாங்கும் சூழல் வரும். ஜாதியை சொல்லி யாரெல்லாம் எங்களை திட்டினாங்களோ, அவர்கள் மீது கஞ்சா கேஸ் போடுங்கன்னு, நாங்க போய் போலீசுகிட்டே சொல்லுவோம்.

போலீசும்நாம சொன்னத செய்வாங்க. அதனால அவுங்க நமக்கு எதிரி கிடையாது” என்று பேசியுள்ளார். இதுபோல் ஒவ்வொரு கட்சியினரும் பிரத்யேகமாக மீம்ஸ் கிரியேட்டர்களை வைத்துக் கொண்டு, மாற்றுக் கட்சியினரின் சர்ச்சை பேச்சுகளை வைரலாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி