ஆப்நகரம்

கமீலா நாசர்-ன் செல்வாக்கை குறைக்க போட்டியாளர்கள் முயற்சி?

பாமகவின் வேட்பாளர் சாம் பால் மற்றும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இவர்களை போட்டியாளரான கமீலா நாசர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்களுள் யாராவது ஒருவர் கமீலாவின் செல்வாக்கை குறைக்க ஜவஹரை விலைக்கு வாங்கியுள்ளனரா என கேள்வி எழுகிறது.

Samayam Tamil 13 Apr 2019, 10:50 am
பாமகவின் வேட்பாளர் சாம் பால் மற்றும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இவர்களை போட்டியாளரான கமீலா நாசர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்களுள் யாராவது ஒருவர் கமீலாவின் செல்வாக்கை குறைக்க ஜவஹரை விலைக்கு வாங்கியுள்ளனரா என கேள்வி எழுகிறது.
Samayam Tamil NasserKameela750


கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மத்திய சென்னை வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகர் நாசரின் மனைவி கமீலா. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமீலா மீதும் நாசர் மீதும் நாசரின் தம்பி ஜவஹர் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இதற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசரின் தம்பி ஜவஹர், “நாசர் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். இதற்கு காரணம் அவரது மனைவி கமீலாதான். நாசருக்கு திருமணம் ஆனதிலிருந்து நாங்கள் அவரைச் சந்திக்கக்கூட அவரது மனைவி அனுமதிப்பதில்லை.

எங்களது குடும்பத்தை பிரித்தது கமீலாதான். நாசர் ஒரு அப்பாவி, அவருக்கு முழு விஷயமும் தெரியாது. கமீலா தான் அவருக்கு மேனேஜர்.

கமல் கட்சியில் மத்திய சென்னை வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டுள்ளார். இப்படி குடும்பத்தை பிரித்தவர் நாட்டுக்கு என்ன செய்து விடுவார். மனதில் கொஞ்சமாவது இரக்க குணம் வேண்டும். மக்கள் நன்கு சிந்தித்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இந்த விவகாரத்தில் நடிகர் நாசர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

தற்போது இதுதொடர்பாக நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள். சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. கமிலா நாசருக்கு “ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்” என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்கு பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது.

நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமிலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது. நான், அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை விளக்க என் 40 வருட வாழ்க்கை உங்களுக்கு சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன்.

உரிய நேரத்தில் உரியவர்க்கு செய்ய வேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது. அதைமீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.

பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது. வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட சக்தி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன்.

தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சக்தி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன்.

தேர்தல் நிறைவுறட்டும், நானும் கமிலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே என்றார்.”

நாசரின் இந்த அறிக்கைக்குப் பின்னர், ஜவஹருக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து தேர்தல் நேரத்தில் கமீலாவின் பெயரை கெடுக்க இவ்வாறு செய்கிறார்களா என சந்தேகம் எழுவதாக சிலர் கூறுகின்றனர்.

அதிமுக-பாஜக கூட்டணி கட்சியான பாமகவின் வேட்பாளர் சாம் பால் மற்றும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இவர்களை போட்டியாளரான கமீலா நாசர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்களுள் யாராவது ஒருவர் கமீலாவின் செல்வாக்கை குறைக்க ஜவஹரை விலைக்கு வாங்கியுள்ளனரா என கேள்வி எழுகிறது.

அடுத்த செய்தி