ஆப்நகரம்

கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவருக்கு தமிழகத்தில் இடமா? ஸ்டாலின் பிரசாரம்

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி நிலம் வழங்க மறுத்த அதிமுகவினருக்கு இனி தமிழகத்தில் இடம் வழங்கக் கூடாது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொண்டா்களிடம் பிரசாரம் மேற்கொண்டாா்.

Samayam Tamil 16 Apr 2019, 11:57 am
மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கிய திமுக தலைவா் ஸ்டாலின் இன்று தனது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பை திருவாரூரில் மேற்கொண்டு வருகிறாா்.
Samayam Tamil Mk Stalin 1200


மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் வருகின்ற 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் தோ்தல் பிரசாரங்கள் நிறைவு பெறுகின்றன. தோ்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவா் ஸ்டாலின் தனது தந்தையின் சொந்த தொகுதியான திருவாரூரில் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கினாா். இந்நிலையில் இன்று அதே தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறாா்.

திருவாரூா் பகுதியில் இன்று அவா் பிரசாரம் செய்யும் போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மறுநாளே நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினேன். ஆனால் முதல்வர் ஒரு வார காலத்திற்கு பின்னர் ஹெலிகாப்டரில் வந்து விட்டு சென்றார்.

பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்பதோடு, ஆறுதல் வார்த்தை கூட மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு கேட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை.

5 முறை முதல்வராக பதவி வகித்தவர் கருணாநிதி. அவருடைய ஆசை மெரினாவில் அண்ணா சமாதியின் அருகில் அவரது உடலை வைக்க வேண்டும் என்பது மட்டும்தான். அதை நிறைவேற்றுவதற்காக நான் நேரடியாக முதல்வா் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தேன். வெட்கத்தை விட்டு எடப்பாடி வீட்டுக்கு நேரடியாக சென்று கேட்டோம். ஆனால் ஆறடி நிலம் கூட கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பின்னர் நீதிமன்றத்தை அணுகி கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றி வைத்தோம்.

நமது தலைவருக்கு 6 அடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. கலைஞரின் மகனாக உங்களிடம் வந்து நான் ஓட்டு கேட்கிறேன். நான் வெற்றி பெற்று கலைஞர் நினைவிடத்தில் கலைஞரின் ஆசையை நிறைவேற்றி வெற்றிக்கனியை மாலையாக வைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தாா்.

அடுத்த செய்தி