ஆப்நகரம்

வாக்கு சேகரிக்க ஊருக்குள் வரவேண்டாம்; எச்சரிக்கை அல்ல, இது கட்டளை - பேனர் வைத்து அசத்தல்!

வரும் மக்களவை தேர்தலை ஒட்டி, ஊருக்குள் தேர்தல் பிரச்சாரத்திற்கு யாரும் வரக்கூடாது என்று சேலம் அருகே உள்ள கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

Samayam Tamil 20 Mar 2019, 1:25 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
Samayam Tamil Election Banner


இதற்காக பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அரங்கனூர் ஊராட்சியில் விசித்திரமான பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில், வாக்குக் கேட்டு வேட்பாளர்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் சாலை, குடிநீர், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லை.

அரசுத் துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ஐயந்துரை உள்ளிட்ட அதிகாரிகள் ஊர்மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அடுத்த செய்தி