ஆப்நகரம்

வசமாக சிக்கிய முதலமைச்சர் வாகனம்; ரூ.1.8 கோடி பணம் கைப்பற்றப்பட்டதால் அதிர்ச்சி!

முதலமைச்சர் வாகனத்தில் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Apr 2019, 7:01 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் 2 மக்களவை தொகுதிக்கும் வரும் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
Samayam Tamil Arunachal Cash


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகாட் பகுதியில் அம்மாநில முதலமைச்சர் பிரேமா கண்டு காரில், தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் ரூ.1.8 கோடி பணம் சிக்கியது. இவற்றில் ரூ.1 கோடி பாஜகவின் மேபோ தொகுதி வேட்பாளர் டங்கி பெர்மி மகன் காரில் பறிமுதல் செய்யப்பட்டது. எஞ்சிய பணம் ரூ.80 லட்சம் மாநில அரசின் போக்குவரத்து துறையின் துணைச் செயலாளரின் காரில் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்கையில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராலோம் போராங் சொந்தமானது என தெரியவந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு போராங் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் பாதியளவு உறவினரிடம் இருந்து கடனாக பெறப்பட்டது.

மீதி பணத்தில் மாரியங் பகுதியில் நிலம் வாங்க திட்டமிட்டிருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு டங்கி பெர்மி மகனும் கடிதம் எழுதினார். அதில், வைர நகைகள் விற்றதன் மூலம் ரூ.1 கோடி பணம் கிடைத்தது. தற்போது கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

எனவே தான் கையில் வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

அடுத்த செய்தி