ஆப்நகரம்

மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்; மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்புமனு தாக்கல்!

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ’ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ நிறுவனருமான கர்ணன், மத்திய சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Samayam Tamil 26 Mar 2019, 11:32 am
சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் சக நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது பல்வேறு புகார்களை முன்வைத்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil Karnan


இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்திய வரலாற்றிலேயே பணியில் இருக்கும் நீதிபதி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், கைது செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி 2017 ஜூனில் கைது செய்யப்பட்டு, 6 மாத சிறைவாசத்திற்கு பின் டிசம்பரில் விடுதலை ஆனார். இவர் மே 2018ல் “ஊழல் ஒழிப்பு செயலாக்கம்” என்ற கட்சியை தொடங்கினார்.

இதன்மூலம் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட சி.எஸ்.கர்ணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து பேசிய அவர், அரசு மற்றும் நீதித்துறையில் இருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வருவேன். எங்கள் கட்சிக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறேன் என்று கூறினார்.

சமீபத்தில் justicekarnan.com என்ற இணையதளத்தை கர்ணன் தொடங்கினார். இதேபோல் மற்றொரு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஹஸ்னைன் மசூடி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.

அடுத்த செய்தி