ஆப்நகரம்

தமிழகத் தேர்தல் அதிர்ச்சி; தபால் ஓட்டுப் போட முடியாத ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.

TIMESOFINDIA.COM 12 May 2019, 3:29 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
Samayam Tamil Postal Votes.


இவர்கள் படிவம் 12 மூலம் தங்கள் வாக்கைப் பதிவு செய்து, தபால் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வாக்கு மையங்களிலோ அளித்து விடலாம். இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு கிடைத்த தகவலின்படி, தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

அவர்களில் 2.75 லட்சம் பேருக்கு மட்டுமே படிவம் 12 அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடப்பாண்டின் தொடக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பழிவாங்கும் நோக்கில் தங்களுக்கு தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, இதுவரை 2.75 லட்சம் தபால் ஓட்டுப் படிவங்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதில் 1.85 லட்சம் தபால் ஓட்டுகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து EDC எனப்படும் தேர்தல் பணிச் சான்றிதழ் 1.18 லட்சம் தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தபால் ஓட்டுகளை, வாக்குகள் எண்ணும் நாளிற்குள் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் எம்.அன்பரசு, பல அதிகாரிகள் தங்களுக்கு இன்னும் தபால் ஓட்டுப் படிவங்கள் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். நாங்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்க அரசு முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் தான் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விரைவாக படிவம் 12ஐ அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி