ஆப்நகரம்

தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் நாளை வெளியீடு

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்த நிலவரம் நாளை மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Apr 2019, 11:05 pm
நாட்டின் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் உட்பட சில மாதங்களில் நடைபெற்றது. மேலும் மாநிலத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது.
Samayam Tamil தமிழகத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவிகிதம் நாளை அறிவிப்பு
தமிழகத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவிகிதம் நாளை அறிவிப்பு


தமிழகத்தில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து தகவல் வெளியிட்டு வந்தது. அதன்படி மக்களவைத் தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரவு 9 மணி வரை 71.62 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து பதிவான வாக்கு நிலவரங்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ , தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும், இரவு 9 மணி நிலவரப்படி கரூர் மக்களவைத் தொகுதியில் அதிகளவில் 78.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல குறைந்தளவில் தென் சென்னை தொகுதியில் 57.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோல புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் அதன், தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற இடைதேர்தலில் 73.33 சதவீதமாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி