ஆப்நகரம்

Anbumani Ramadoss: சரிந்துபோன தருமபுரி கோட்டை; அன்புமணி தோற்றதற்கு காரணம் இதுதான்!

தருமபுரி மக்களவை தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவியதற்கான காரணங்கள் குறித்து, இங்கே ஆராயலாம்.

Samayam Tamil 24 May 2019, 2:34 pm
பாமக இளைஞரணித் தலைவராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வரை உயர்ந்தவர் அன்புமணி ராமதாஸ். இவர் 2004 மற்றும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்து எம்.பி ஆனார்.
Samayam Tamil Anbumani Mango


நடப்பாண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து, போராடி 7 மக்களவை தொகுதிகளை பாமக பெற்றது. மேலும் ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்குவதாகவும் அதிமுக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் பாமகவின் கோட்டை என்று கருதப்பட்ட தருமபுரி மக்களவை தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து திமுகவின் செந்தில் குமார், அமமுகவின் பழனியப்பன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ஆனால் தேர்தல் முடிவுகள் அன்புமணிக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்தது. தொடக்கத்தில் அன்புமணி முன்னணியில் இருந்த நிலையில், பின்னர் சரிவைச் சந்தித்தார்.

இறுதியில் திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். தருமபுரியை கோட்டையாக கருதிய பாமகவிற்கு, இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

அதாவது, கடந்த மக்களவை தேர்தலின் போது அன்புமணி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தார். அதில் முக்கியமானது தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம் தான். ஆனால் இதனை தனது பதவிக் காலத்தின் இறுதியில் தான் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முன்னேறிய மாவட்டமாக மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தருமபுரி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வண்ணம் எந்தவித புதிய தொழிற்சாலைகளும் கொண்டு வரப்படவில்லை.

சுகாதார வசதிகள் மேம்படுத்தாது, பாலக்கோடு மருத்துவமனை தரம் உயர்த்தாதது, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி சுற்றுலாத் துறையின் கீழ் கொண்டு வராதது, கோவை - பெங்களூரு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பாலக்கோட்டில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்கள் அன்புமணி தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி