ஆப்நகரம்

Lok Sabha Elections: தேர்தலே நடக்கல; அதுக்குள்ள 3 பேர் ஜெயிச்சாச்சு - வெற்றிக் கணக்கை தொடங்கிய பாஜக!

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று தனது கணக்கை தொடங்கியுள்ளது.

TIMESOFINDIA.COM 3 Apr 2019, 5:51 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் அருணாசலப் பிரதேசத்தின் 2 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
Samayam Tamil BJP Flag


அதேநாளில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நிறைவடைந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், கடந்த மாதம் 28ஆம் தேதியுடன் முடிவுற்றது.

இந்நிலையில் ஆலோ கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் கெண்டோ ஜினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் கட்சியின் மின்கிர் லோலென்னின் வேட்புமனு, பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டது.

இதேபோல் யச்சுலி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரும் எதிர்ப்பின்றி வெற்றி பெற்றுள்ளார். மேலும் திரங் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் புர்பா செரிங்கை எதிர்த்து போட்டியிடவிருந்த காங்கிரஸ் வேட்பாளர் செரிங் யுர்மே மற்றும் சுயேட்சை வேட்பாளர் கொம்பு செரிங் ஆகியோர் தனது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

இதனால் புர்பா செரிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கங்கி தரங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் 57 தொகுதிகளுக்கும் மட்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 191 பேர் போட்டியிடுகின்றனர்.

அதாவது பாஜக 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 47 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 30 தொகுதிகளிலும், ஜனதா தள் செக்குலர் 13, ஜனதா தள் யுனைடெட் 17, அல் இந்தியா கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் இரு மக்களவை தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன. இதில் மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். அம்மாநிலத்தில் 7,94,162 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அவர்களில் 4,01,601 பேர் பெண்கள் ஆவர். வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக 2,202 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அடுத்த செய்தி