ஆப்நகரம்

இந்த மாநிலத்திற்கு தான் அதிக அமைச்சர்கள் பதவி; வாரி வழங்கிய மோடி அரசு!

மோடி அமைச்சரவையில் அதிகப்படியான அமைச்சர்கள் எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 31 May 2019, 7:28 am
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன்மூலம் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் பலத்தை பாஜக பெற்றது.
Samayam Tamil Modi Cabinet


இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 பேருக்கு கேபினட் அமைச்சர், 9 பேருக்கு தனிப்பொறுப்பு அந்தஸ்து, 24 பேருக்கு இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மோடியின் அமைச்சரவையில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிக அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதாவது 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து 8 பேரும், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து 5 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கடுத்த இடத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 4 பேரும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து 3 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும் மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலா 2 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அருணாச்சலப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, கோவா, ஹிமாச்சல் பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஒரேவொரு இடத்தில் மட்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் இருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இதேபோல் ஆந்திரா, சிக்கிம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலும் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அடுத்த செய்தி