ஆப்நகரம்

SBI CLERK MAINS EXAM தேதியை மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் MP சு.வெங்கடேசன் எஸ்பிஐ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்!

எஸ்பிஐ கிளார்க் பணிகளுக்கான தேர்வை ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து மாற்றுமாறு கோரிக்கை வைத்து சென்னையில் உள்ள SBI தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார் MP சு.வெங்கடேசன்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 13 Jan 2023, 3:19 pm
ஜனவரி 15 ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் தினத்தன்று பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என SBI அறிவித்திருந்தது. 5486 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு இரண்டாவது கட்டமாக 15ஆம் தேதி முதன்மை தேர்வு நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
Samayam Tamil MP su. venkatesan


அந்த நாளன்று தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதால் தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த MP சு.வெங்கடேசன் தேர்வு தேதியை மாற்றுமாறு பல முறை கோரிக்கை வைத்தும் SBI அதற்கு செவிசாய்க்கவில்லை.

இதனால், இன்று 13.1.2023 சென்னையில் உள்ள SBI தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகத்தில் MP சு.வெங்கடேசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களோடு பேச்சு வார்த்தைக்கு சென்றுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் MP திரு சு.வெங்கடேசன், கட்சி நிர்வாகிகள் செல்வா மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் பொது மேலாளர் அறையிலேயே உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர். தேர்வு தேதியை மாற்றாத வரை இந்த இடத்தை விட்டு செல்லமாட்டோம் என்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதே கோரிக்கைக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த அலுவலகத்தை தற்போது முற்றுகையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி