ஆப்நகரம்

குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Jul 2019, 11:37 am
டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேள்வி பதில் தவறாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய போதும், மனுதாரர் தேர்ச்சி பெறாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai high court


அரசுத் துறையில் சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பிரிவுகளில் 139 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான கடந்த மார்ச் மாதம் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3ம் தேதி வெளியான நிலையில், குரூப் 1 தேர்வு எழுதிய விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதில், டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த தேர்வை ரத்து செய்யும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி பார்த்திபன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குரூப் 1 தேர்வில் 18 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது குறித்து மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு அமைப்பட்டது. மேலும், கேள்வி தவறாக கேட்கப்பட்டதால், அதற்கு ஈடாக தேர்வர்களுக்கு 6 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மனுதாரர் விக்னேஷ் தேர்ச்சிப் பெறவில்லை. எனவே, அவர் தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வாதாடினார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் விக்னேஷ் தாக்கல் செய்த, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனால், ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் இறுதியானது என்பது தெரிகிறது. விரைவில் அடுத்தக்கட்ட பணிகளை டி.என்.பி.எஸ்.சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி