ஆப்நகரம்

யுஜிசி விதிகளின்படி உதவிப் பேராசிரியர் நியமனம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

" தமிழகத்தில் அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 1 Jul 2019, 6:17 pm
பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Tamil_News_large_1998511


இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், தமிழகத்தில் அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு 2009-ல் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றக்கோரி ராஜேஷ், ஜெஸ்லின்பிரிசில்டா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி சுப்பிரமணியன், " தமிழகத்தில் அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “ஆசிரியர் பணி என்பது உயர்வான பணியாகும். வகுப்பறைகளில் கற்பிப்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழு நேர கல்லூரிகளில், கண்டிப்பாக முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்த வெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள்.

இதனால் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி