ஆப்நகரம்

ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு!

ஏப்ரல் 30 ஆம் தேதியோ பணி நிறைவு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Apr 2020, 7:26 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. ஏப்ரல் 25 ஆம் தேதி நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 30 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிக பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil Edappadi Palanisamy


இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
'தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், 31.3.2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்.

அதே போன்று, 30.4.2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி