ஆப்நகரம்

ஆதார் வைத்திருப்பவர் எல்லாம் இந்தியர் அல்ல: நீதிமன்றம்

ஆதார் வைத்திருந்தால் மட்டுமே இந்தியக் குடியுரிமை உண்டு என்று கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 1:01 pm
ஆதார் வைத்திருந்தால் மட்டுமே இந்தியக் குடியுரிமை உண்டு என்று கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Samayam Tamil aadhar-image-8-1


கடந்த ஜூலை 1ஆம் தேதி சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் திவ்யா என்பவரின் தாய் ஜெயந்தியை கைது செய்தனர்.

இது தொடர்பாக திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இலங்கையில் பிறந்த ஜெயந்தி அங்கு நடைபெற்ற போரினால் இந்தியா வந்து, தமிழகத்தில் பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டவர் என்றும் திருமணத்துக்குப் பின் இந்தியாவிலேயே வசித்து வருகிறார் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயந்தி இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் இருந்தபோதும், அவர் கைது செய்யப்பட்டதாக புகார் கூறியுள்ள திவ்யா, பணி நிமித்தமாக அவ்வப்போது இத்தாலி சென்றுவந்த ஜெயந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் 1994ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது என்றும் பின் அவர் சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி டி.ராஜா, “ஒருவருக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை இருந்தாலே அவரை இந்தியக் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது.” என்று தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அனைத்தும் அங்கீகரித்தால்தான் இந்தியக் குடியுரிமை பெற்றவராக ஏற்க முடியும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

அடுத்த செய்தி