ஆப்நகரம்

ரயில் சேவை பாதிக்கப்படாமல், ஊதிய உயர்வு கோரி போராடும் சென்னை மெட்ரோ ஊழியர்கள்!

ஊதிய உயர்வு கோரி, மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 5 Jul 2018, 12:29 am
சென்னை: ஊதிய உயர்வு கோரி, மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil CMRL Protest


சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பு, மெட்ரோ ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராடினர். ரயில் சேவை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடந்த 5 நாட்களாக பணி நேரம் முடிந்த பின் போராட்டம் நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், இளநிலை பொறியாளர்கள் அடங்குவர்.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு, மெட்ரோ ரயிலின் முதல் தடச் சேவை செயல்பாட்டிற்கு வருவதற்கு முன், இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ரூ.23,000ம், பொறியாளர்களுக்கு ரூ.39,000ம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 15% எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10% அல்லது அதற்கும் குறைவாகவே ஊதிய உயர்வு பெறப்பட்டதாக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் சில படிகள் குறைக்கப்பட்டுள்ளதால், ஊதிய உயர்விற்கு பின்னரும் அதே ஊதியத்தைப் பெறும் நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் குறைந்த வருவாய் காரணமாக, அதிக உயர்வு அளிக்கவில்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரம், காலம் பார்க்காமல் அதிக நேரம் உழைக்கும் தங்களுக்கு, போதிய ஊதிய உயர்வு வழங்கப்படாதது வேதனையளிப்பதாக ஊழியர் ஒருவர் கூறினார்.

இரவு நேரப் பணி, அரசு விடுமுறை நாளில் பணி போன்றவற்றிற்கு எந்தவித படித்தொகையும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். தங்கள் நோக்கம் ரயில் சேவையை பாதிப்பது அல்ல. இதனைப் பொதுச் சேவையாகவே கருதுகிறோம் என்று கூறினர்.

Chennai Metro Rail employees protest for pay hike without affecting train services.

அடுத்த செய்தி