ஆப்நகரம்

இந்தியாவிலேயே நீளமானது: மாஸ் காட்டிய ஸ்டாலின்... தி.நகர் ஸ்கை வாக்கின் சிறப்பம்சங்கள்!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக்கியமானதாக பார்க்கப்படும் தி,நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கட்டப்பட்ட ஸ்கை வாக்கை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்தியாவிலேயே நீளமானதாக கட்டப்பட்டுள்ள இந்த ஸ்கை வாக் தி.நகரின் மற்றொரு அடையாளமாக அமைந்திருக்கிறது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 16 May 2023, 5:15 pm
சென்னை பெருநகரத்தின் முக்கிய வணிக பகுதிகளில் ஒன்றாக தி.நகர் விளங்குகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள் என தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், நவீன வசதிகளுடன் புதிய ஸ்கை வாக் அமைக்க கடந்த 2020ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
Samayam Tamil chief minister stalin inaugurate new sky walk constructed in t nagar chennai
இந்தியாவிலேயே நீளமானது: மாஸ் காட்டிய ஸ்டாலின்... தி.நகர் ஸ்கை வாக்கின் சிறப்பம்சங்கள்!


நாட்டிலேயே நீளமான ஸ்கை வாக்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2020ஆம் ஆண்டு இந்த ஸ்கை வாக் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி தரப்பில் சுமார் 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரயில் நிலையம் வரை சுமார் 2,000 அடி நீளத்தில் இந்த ஸ்கை வாக் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே நீளமான ஸ்கை வாக் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஸ்கை வாக் சிறப்பம்சங்கள்

மாற்றுத் திறனாளிகளும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி, மின் தூக்கி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் நடப்பதற்கு ஏதுவாக அகலமாகவே இந்த ஸ்கை வாக் கட்டப்பட்டுள்ளது.

மக்களுக்கு பயன்படும் ஸ்கை வாக்

தி.நகரின் மற்றொரு அடையாளமாக உருவாகி இருக்கும் இந்த ஸ்கை வாக் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து 5 நிமிடத்தில் தி.நகர் பேருந்து நிலையம் சென்றுவிட முடியும். நாள்தோறும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இந்த ஸ்கை வாக் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முதலமைச்சர் திறப்பு

நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி உள்ளிட்ட வசதிகளுடன் நாட்டிலேயே நீளமான ஸ்கை வாக் என்ற பெருமையை கொண்ட இந்த ஸ்கை வாக்கை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ஸ்கை வாக் திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர் கண்காணிப்பு

பொதுமக்கள் அச்சமின்றி செல்லும் வகையில் ஸ்கை வாக் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கை வாக்கை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்கிறார்களான மாநாகராட்சி தரப்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் மகிழ்ச்சி

தி.நகர் செல்லும் சென்னைவாசிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லலாம் என்ற மகிழ்ச்சியான மனநிலையுடன் போனாலும், அங்கு சென்ற பின்னர் நிலைமை மாறி விடுகிறது. கூட்டத்தில் சிக்கி ஏராளமான மக்கள் சோர்வுடனே வீடு திரும்பும் நிலைக்கு சென்று விடுகின்றனர். தற்போது, இந்த ஸ்கை வாக் மூலம் கூட்ட நெரிசல் பெருமளவில் குறைய வாய்ப்பிருப்பதால் சென்னைவாசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி