ஆப்நகரம்

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்..சொதப்பும் சிஎம்டிஏ..அடுத்த சிக்கல்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இந்த மாதம் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பேருந்து இணைப்பு வசதிகள் செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த பேருந்து நிலையம் திறக்கப்படுவது தாமதமாகி வருகிறது. தற்போது, வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கடிதம் எழுதியுள்ளது.

Authored byபிரபாகர் B | Samayam Tamil 5 Jun 2023, 12:00 pm
கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் கொரோனா காரணமாக தாமதமான நிலையில், தற்போது முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளது. விரைவில் இந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Samayam Tamil cmda written to tambaram police commissioner regarding kilambakkam bus terminus plan
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்..சொதப்பும் சிஎம்டிஏ..அடுத்த சிக்கல்!


சிஎம்டிஏ கடிதம்

சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பார்க்கப்படும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், மாநகர பேருந்துகள் மட்டுமே சென்னைக்குள் இயங்கும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

சென்னைக்குள் நுழைய தடை

அதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர், மாநகர பேருந்துகள் அல்லாத அரசு பேருந்துகள், தனியார் பேருந்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. உரிய காரணத்துடன் அனுமதி பெற்ற பேருந்துகளை மட்டுமே நகருக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்டை மாவட்டங்களுக்கு சிக்கல்

இதன் காரணமாக, நெல்லை, மதுரை உள்ளிட்ட தூர மாவட்டங்களை போன்று விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களும் சென்னை நகருக்குள் செல்வதில் சிக்கல் ஏற்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கி ரயில் அல்லது மாநகர பேருந்து மூலம் நகருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இது சென்னையை சுற்றி இருக்கும் மாவட்ட மக்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

போக்குவரத்து துறை விளக்கம்

தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதில் சிக்கல் இருக்கின்றன. தென் மாவட்டங்கள் என்றால் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்ல செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தென் மாவட்ட வழித்தடமாகவே கணக்கிடப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்படும்.

இணைப்பு வசதி அதிகரிக்குமா?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால், தற்போது வரை சென்னைக்குள் செல்ல மாநகர பேருந்துகள் மட்டுமே இணைப்பு சேவையாக உள்ளது. அதேநேரத்தில், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து ஸ்கை வாக் மூலம் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி