ஆப்நகரம்

சென்னையில் விரைவில் முழு ஊரடங்கு? - ஊருக்கு போறவங்க போய்கோங்க!

சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களின் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 11 Jun 2020, 5:43 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனால், கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக மக்கள் ஓரளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. அதிலும், தமிழகத்தில் நாள்தோறும் 1,500க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான பாதிப்புகள் பதிவாகி வருவது, கொரோனாவின் புதிய மைப்புள்ளியாக சென்னை மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கொரோனா பரவலை கண்காணிக்க நாடு முழுவதும் 50 மாவட்டங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மாவட்ட வாரியாக அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், சென்னையும் உள்ளது. எனவே, சென்னை உள்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களின் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மறுப்பு தெரிவித்திருந்தார்.

துண்டாகிறதா சென்னை? ஐகோர்டில் நாளை பதில், சிக்கிக் கொண்ட தமிழ்நாடு அரசு!

இந்த நிலையில், தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்க முடியாது. மருத்துவ வல்லுனர் குழு அறிக்கையாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர், அமைச்சரவை கூடியே மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

எனினும், சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் வியாபாரிகள் தரப்பில் முழு ஆதரவு தரப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். அதேபோல், சென்னை மற்றும் சுற்றுமாவட்டங்களில் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராயபுரம் பரபரப்பு..! மீண்டும் ஊரடங்கா? - ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை

அதேசமயம், வழக்கு ஒன்றின் விசாரணையின் இடையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களின் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, வெளியூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வெளி ஊருக்கும் செல்ல இருப்பவர்கள், செல்ல நினைப்பவர்கள் தங்கள் பயணத்தை விரைவாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி