ஆப்நகரம்

Marina Beach: "வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்" தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் முழக்கம்

மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் சட்டச்சிக்கல் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்த நிலையில், தற்போது திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ”வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்” என்ற கோஷத்தை முழங்கி வருகின்றனர்.

Samayam Tamil 7 Aug 2018, 9:06 pm
மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் சட்டச்சிக்கல் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்த நிலையில், தற்போது திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ”வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்” என்ற கோஷத்தை முழங்கி வருகின்றனர்.
Samayam Tamil dmk-chief-karunanidhi
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வலுக்கும் கோரிக்கை


சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளில் திமுக இறங்கியது.

இதற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தார். அதற்கு முதல்வர் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பியதாக துரைமுருகன் காவேரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

துரைமுருகனின் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த சற்று நிமிடத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மெரினாவில் இடம் ஒதுக்குவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், அதனால் வேறு இடத்தில் இடம் கொடுக்க தயார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய காந்தி நினைவு மண்டபம் அருகே 2 ஏக்கர் இடம் கொடுக்க என தயார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு தற்போது அதிருப்தி தெரிவித்துள்ள திமுக-வினர் காவேரி மருத்துவமனை முன்பு ”வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்...” என முழக்கம் எழுப்ப தொடங்கினர். இதே முழக்கம் தமிழகம் முழுவதும் தற்போது தீவிரமடைந்துள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிபேட்டை பகுதியில் திமுக தொண்டர்கள் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வலியுறுத்தி சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து கோயம்புத்தூரில் குனியமுத்தூர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன்பு கூடியிருக்கும் திமுக தொண்டர்கள் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யக்கோரி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ளனர். பேரிகேடுகளை தூக்குவீசியும், தள்ளிவிட்டும் எதிர்பு குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி