ஆப்நகரம்

மீண்டும் குளிர்ந்த சென்னை- வாரி, வாரி வழங்கிய மழை; உற்சாகப் பெருக்கில் பொதுமக்கள்!

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 27 Jun 2019, 9:26 am
தமிழகம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது, நீர் நிலைகளை முறையாக பராமரிக்காதது, மழை நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
Samayam Tamil Chennai Rains.


இதில் அரசு தரப்பில் பெரும்பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக அலைமோதிக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு இடங்களில் மழை வேண்டி யாகங்கள், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

மக்களே இன்று இரவு சென்னையில் மழை கொட்டப் போகிறது...தமிழ்நாடு வெதர்மேன்!!

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி மக்கள் தவிப்பில் இருந்து வருகின்றனர். நகரின் தண்ணீர் தேவைக்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

மழைநீரின் அருமையை உணராமல், அதனை முறையாக சேமிக்காமல் விட்டுவிட்டனர். இந்த சூழலில் சுமார் 190 நாட்களுக்கும் மேலாக மழையின்றி சென்னை மாநகர் தவித்து வந்தது. இதனைப் போக்கும் விதமாக சமீபத்தில் மழை பெய்தது.

அப்போது பல்வேறு குடியிருப்புகளும் மழைநீர் சேகரிப்பில் ஈடுபட்டு, 20,000க்கும் அதிகமான நீரை சேமித்துள்ளனர். இதற்கடுத்து சென்னையில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்த சூழலில் நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.

அசோக் நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், தி நகர், வளசரவாக்கம், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதற்கு தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இன்று இரவு சென்னையில் மழை கொட்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வரும் நாட்களில் இந்த மழை தொடர்ந்தால், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பொதுமக்களும் தண்ணீர் சேமிப்பு, சிக்கனம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி