ஆப்நகரம்

குடிப்பழக்கத்தை விடச் சொன்னதால் தீக்குளித்த வாலிபர், காதலி தற்கொலை

தினமும் மருத்துவமனைக்கு சென்று காதலன் மணிகண்டனை சந்தித்துவிட்டு வந்த திவ்யா காதலன் இறந்த தகவல் அறிந்து மனமுடைந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 1 Jun 2019, 8:50 pm
சென்னையில் பெற்றோர் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்ததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள, அவரது காதலியும் தற்கொலையை செய்துகொண்டிருக்கிறார்.
Samayam Tamil 180461-dead


சென்னை மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ் கொளத்தூர் பொன்னி அம்மன் நகர் 7வது தெரு சேர்ந்தவர் மணிகண்டன் (22). ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் கோவிலம்பாக்கம் சத்யா நகர் 6வது தெருவை சேர்ந்த திவ்யா (22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது

மணிகண்டன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை விடும்படி பெற்றோர் கூறியதால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும்.

இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி இரவு மணிகண்டன் வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் கதவை மூடி உள்ளனர். இதையடுத்து மணிகண்டன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கியுள்ளார். தினமும் ஏன் இப்படி குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறாய் என பெற்றோர் கேட்டு, குடிப்பழக்கத்தை விட்டு விடு என கூறியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த மணிகண்டன் மண்ணெண்ணையை எடுத்து பெற்றோர் கண்முன்னே தலையில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதை பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார்.

தினமும் மருத்துவமனைக்கு சென்று காதலன் மணிகண்டனை சந்தித்துவிட்டு வந்த திவ்யா காதலன் இறந்த தகவல் அறிந்து மனமுடைந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரு சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி