எதிர்பார்ப்பில் கிளாம்பாக்கம்
புதிய பேருந்து நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் கோயம்பேடு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து புதிய வழித்தட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீல வழித்தட மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கும் திட்டமும் தயாராகி விட்டது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் பகுதியானது படிப்படியாக வேற லெவலுக்கு மாறவுள்ளது.
புதிய போக்குவரத்து வசதிகள்
புதிதாக குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என வரிசை கட்டி வருவதற்கு தயாராகி விட்டன. இப்பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பு விண்ணை தொடவிருக்கிறது. இந்நிலையில் கிளாம்பாக்கத்திற்கு செல்லும் வகையில் புதிய நேரடி போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
ஒரகடம் சிப்காட்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை புறநகர் ரயில் சேவை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் இடைப்பட்ட தூரம் 34 கிலோமீட்டர் தூரம் ஆகும். பேருந்துகளில் செல்ல வேண்டும் என்றால் இரண்டு அல்லது மூன்று பேருந்துகளில் மாற வேண்டும். எப்படியும் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் ஆகிவிடும்.
புறநகர் ரயில் சேவை
எனவே புறநகர் ரயில் சேவை அமைத்து கொடுத்தால் அரை மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம் என்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரகடம் மற்றும் கிளாம்பாக்கம் இடையிலான சுற்றுலா பகுதிகள் வளர்ச்சி அடையும். தொழில் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். ஒரகடம் சிப்காட்டை பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையை விளங்குகிறது.
பல்வகை தொழில் நிறுவனங்கள்
அதுமட்டுமின்றி பல்வகை தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அதில் அப்போலோ டயர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், போஸ்ச் இந்தியா, டால்மியா இந்தியா கமர்சியல் வெஹிகல்ஸ், யமஹா மோட்டார்ஸ், மிண்டாரிகா, நோக்கியா, நிசான், ராயல் என்ஃபீல்டு, சாந்தார், டெல்பி-டிவிஎஸ் டீசல் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். சென்னையை ஒட்டி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் ஒரகடமும் ஒன்று.
கிளாம்பாக்கத்திற்கு புது ரூட்
ஒரகடம் சிப்காட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 45 மற்றும் 4 ஆகியவற்றை இணைக்கும் சாலை திட்டமும், ஸ்ரீபெரும்புதூர் வரை புதிய சாலை அமைக்கும் திட்டமும் முன்னெடுப்பில் இருக்கின்றன. இவற்றுடன் ஒரகடம் சிப்காட் முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரையில் புறநகர் ரயில் சேவை அமைத்து கொடுத்தால் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை மெட்ரோ ரயில் சேவைக்கான வாய்ப்புகள் இருந்தால் கூடுதல் சிறப்பு சேர்ந்ததாக மாறக்கூடும்.