ஆப்நகரம்

இவ்வளவு தண்ணீர் பஞ்சத்திலும், வெறும் 5 நீர்நிலைகளை சீரமைத்து ஷாக் கொடுத்த தமிழக அரசு!

ஏராளமான நீர்நிலைகள் கொண்ட சென்னையில், தூர்வாரும் நடவடிக்கையில் தமிழக அரசு மிக மோசமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 20 Jun 2019, 8:42 pm
தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் வேதனையை காண முடிகிறது. கடந்த ஆண்டே பருவமழை பொய்த்த நிலையில், நடப்பாண்டின் தண்ணீர் தேவைக்காக மாநில அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
Samayam Tamil Chennai-WaterBodies


இது தமிழக மக்களை வெகுவாக பாதித்துள்ளது. நீர் நிலைகளை முறையாக தூர்வாராதது, ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, மழைநீர் சேமிப்பை ஒழுங்காக கடைபிடிக்காதது உள்ளிட்டவை தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகருக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள் வறண்டு போய்விட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துபோனது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அதிர்ச்சிகர தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, சென்னை மாநகரில் 210 நீர் நிலைகள் இருக்கின்றன.

பல நூறு ஆண்டுகளாக இந்த நீர்நிலைகள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் தேவையில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. நீர் நிலைகள் சூழலியல் மண்டலத்தின் உயிர் நாடியாக விளங்குகின்றன.

எனவே நீர் நிலைகளை மேம்படுத்த தமிழக முதல்வர் பழனிசாமி சிறப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன்படி, ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் 5 நீர் நிலைகள் ஏற்கனவே தூர்வாரப்பட்டு விட்டன.

ரூ.18.20 கோடி மதிப்பீட்டில் 52 நீர் நிலைகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு பெரிய நீர் நிலைகள் ரூ.25.29 கோடி செலவில் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுநாள் வரை வெறும் 5 நீர் நிலைகள் மட்டும் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டே தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநில அரசு விவரம் அறிந்திருக்கும். எனவே நடப்பாண்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அப்போதே தொடங்கி இருக்க வேண்டும் அல்லவா.

ஆனால் தற்போது நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில், அதிர்ச்சி அளிக்கும் வகையிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இது தமிழக மக்கள் மீதான அரசின் அலட்சியத் தன்மையை காட்டுவதாக இருக்கிறது.

அடுத்த செய்தி