ஆப்நகரம்

கொரோனா காரணமாகச் சென்னையில் சுமார் ஒரு லட்சம் வழக்குகள்: கமிஷ்னர் தகவல்!

கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டுமெனச் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 10 Apr 2021, 5:31 pm
சென்னை எழும்பூரில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் காவல் அதிகாரிகள் குடும்பங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து காவல்துறை அதிகாரிகள், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தடுப்பூசி முகாம்கள் துவக்கப்பட்டது.
Samayam Tamil கொரோனா காரணமாகச் சென்னையில் சுமார் ஒரு லட்சம் வழக்குகள்: கமிஷ்னர் தகவல்!


இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். அதன்பின் காவல் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பு வழிமுறையாக கபசுரக் குடிநீரையும் அவர் வழங்கி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்:
சென்னை காவல்துறையினர் கடந்த ஆண்டு கொரோனாவை தடுக்க பல்வேறு வியூகங்களை வகுத்தனர். தொடர்ந்து தற்போதும் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் முகக் கவசம் அணியவும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

கொரோனா அபராதம்... டார்க்கெட் ஃபிக்ஸ் செஞ்ச சென்னை கார்ப்பரேஷன்!

காவல்துறையினர் பொதுமக்களிடம் நெருங்கிப் பழகும் சூழல் அதிகம் ஏற்படுவதால் காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். இதுவரை 5 ஆயிரத்து 998 பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதனை நூறு சதவீதம் ஆக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை முகக் கவசம் அணியாத 87 ஆயிரத்து 296 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த 11 ஆயிரத்து 139 வழக்குகளும், வீட்டு கண்காணிப்பை மீறிச் செயல்பட்டவர்கள் மீது 117 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி