ஆப்நகரம்

லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்; ஈஷாவுக்கு வரும் யானைகளை கைது செய்யுங்க - திருமுருகன் காந்தி

சென்னை லூப் சாலை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அகற்றியதற்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Apr 2023, 12:39 pm
சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசாருடன் மீன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்தை கொண்டு வந்து மீன் வியாபாரிகளின் கடைகளை உடைத்து அகற்றியதோடு மீன்களை சாலைகளில் வீசியதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil loop road


பட்டினம்பாக்கம் கலங்கரை விளக்கம் அருகே உள்ள லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் மீனவர்கள் கடையை போட்டு ஆங்காங்கே அமர்ந்து பொழுதை கழிப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தை தாமாக முன்பு வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று மாநகராட்சி நிர்வாகம் லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசாரின் உதவியுடன் ஜேசிபி-யை கொண்டு அகற்றியது. அப்போது மீனவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் ஈஷா மைய ஆக்கிரமிப்பை அகற்றாமல் எளிய மக்களை தமிழக அரசு துன்புறுத்துவதாக மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

''கனம் மாநகராட்சி அவர்கள் மெரினா லூப் சாலையில் செல்வதைவிட மயிலாப்பூர் வழியாக சென்றால் கபாலிஸ்வரர் கடாட்சம் தினம்தினம் கிடைக்க வாய்ப்புண்டு. அதனால் அச்சாலையில் உள்ள விவேகானந்த மடத்தின் ஒருபகுதியையும், கோவில் குளத்தினருகே மடங்களையும் அரசே எடுத்துக்கொண்டு சாலையை விரிவாக்கம் செய்தால் கனம் கோர்ட்டார்கள் காபாலியின் அருளோடு அன்றாடம் பணி செய்வதோடு, கோவில் பூசை பொருட்களை ’குத்தவைக்காமல்’ விற்பனை செய்பவர்களை கண்குளிர பார்த்து மகிழலாம். மேலும் ஈஷாவிலிருக்கும் சிவனுடைய நிலத்தினை ஆக்கிரமித்து கூட்டமாக நடந்து போகும் யானைகளை கைது செய்யவும் உத்திரவிடலாம்.

சிவன் நிலத்தில் யானைக்கு என்ன வேலை, ஏன் சிவன் நிலத்தை அசிங்கப்படுத்தும் வகையில் சாணிகளைப் போடுகின்றீர்கள்.. என யானைகளுக்கு மானம் போகும் வகையில் நாக்கைப்பிடுங்கும் கேள்வி எழுப்புங்கள் யுவர் ஆனர்''

என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி