ஆப்நகரம்

ரூட்டை மாத்திய தி.நகர்... சுத்த விட்ட CMRL... Take Diversion சிக்கலில் சென்னைவாசிகள்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டதால் தி.நகர் கடும் நெரிசலில் திக்குமுக்காடி வருகிறது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 16 Nov 2022, 9:55 am
தலைநகர் சென்னையின் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் (CMRL) Phase-2 திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ பணிகளுக்காக (Corridor 4) தி.நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil traffic diversions in t nagar for cmrl works made heavy traffic
ரூட்டை மாத்திய தி.நகர்... சுத்த விட்ட CMRL... Take Diversion சிக்கலில் சென்னைவாசிகள்!


பனகல் பார்க் மெட்ரோ

தி.நகரில் பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கத்தில் வரவுள்ளது. இதையொட்டி சுரங்க ஆய்வு பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி, மூன்றாவது நாளாக தி.நகர் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான உரிய வழிகாட்டி பதாகைகள், பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம்

இதன் காரணமாக டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் அமைந்துள்ள வெங்கட்நாராயணா சாலை, தியாகராயா சாலை, பிரகாசம் சாலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் வந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வேறு வழிகளில் திருப்பி விட்டனர். இதனால் வழக்கத்தை விட 20 முதல் 30 நிமிடங்கள் வரை பயணம் தாமதம் ஆவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.


திருமயிலை மெட்ரோ... 35 மீ ஆழமும், த்ரீ இன் ஒன் வசதியும்... இது வேற லெவல் ஆச்சரியம்!

மெட்ரோ ரயில் பணிகள்

ஆம்புலன்ஸ் கூட சிரமங்களை சந்தித்து வருவதை பார்க்க முடிந்தது. மெட்ரோ பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் வழி கேட்டு சென்னைவாசிகள் திணறி வருவதும் புதிய சிக்கலாக மாறி வருகிறது. போக்குவரத்து போலீசார் இருந்தால் தப்பித்துக் கொண்டோம் என்ற நிலை தான் காணப்படுகிறது. உதாரணமாக தியாகராயா சாலையில் போக்குவரத்து வழித்தடம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தடுமாறும் MTC பேருந்துகள்

மொத்தமுள்ள 4 வழித் தடங்களில் இரண்டில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு வழித்தடத்தில் ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் கேப் ஓட்டுநர்கள் பிக்கப் அல்லது ட்ராப் வேலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். எஞ்சியுள்ள ஒரு வழிச்சாலையில் மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றன. அண்ணா சாலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகளும் இந்த வழியாக தான் செல்கின்றன.

நெரிசலில் வெங்கட் நாராயணா சாலை

தவிக்கும் வாகன ஓட்டிகள்

திடீரென மழை வந்துவிட்டாலோ அல்லது ரஷ் ஹவரிலோ நிலைமை படுமோசம் தான். இத்தகைய நெருக்கடியால் பாதசாரிகள் செல்லும் நடைபாதையிலும் இருசக்கர வாகனங்கள் படையெடுத்து செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு அச்சத்திற்கு ஆளாகியுள்ளது. இதுதொடர்பாக தி.நகர் குடியிருப்புவாசிகள் சிலர் கூறுகையில், எங்களிடம் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.


சென்னைக்கு 3வது சவால்... அடுத்த பெருமழையை தாங்குமா? இப்படியொரு சிக்கல் இருக்கு!

சோதனை ஓட்டம்

இந்த விஷயத்தில் விரிவான ஆய்வறிக்கை தயார் செய்து போக்குவரத்து வல்லுநர்களின் ஆலோசனையின்படி முடிவெடுத்திருக்கலாம். தற்போதைய சூழல் மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ராஜேந்திரன் கூறும் போது, இதுவொரு சோதனை ஓட்டம் தான். பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டு உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.

பரந்தூர் வரை நீட்டிப்பு

விரைவில் பனகல் பார்க் மற்றும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த வழித்தடத்தில் 15 முதல் 30 மீட்டர் ஆழத்தில் Twin Tunnels எனப்படும் இரட்டை சுரங்கப் பாதை அமைக்கப்படுகின்றன. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் பாதையானது சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் வரை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி