ஆப்நகரம்

வேற லெவலில் மாறும் சென்னை லிட்டில் மவுண்ட்... வருகிறது டபுள் டமாக்கா வசதி!

பாதசாரிகள் வசதிக்காக லிட்டில் மவுண்ட் சிக்னலில் நவீன வசதிகளுடன் கூடிய இரட்டை நடை மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 12 Dec 2022, 1:04 pm
சென்னை கிண்டி அடுத்த லிட்டில் மவுண்ட் (சின்னமலை) பகுதி மிகவும் பிஸியான ஏரியாக்களில் ஒன்று. இங்கு பள்ளி, கல்லூரிகள், கடைகள், மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம், சர்ச், சைதாப்பேட்டை நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. லிட்டில் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நான்கு வழிச் சாலையாக இருக்கிறது.
Samayam Tamil twin walkway bridges coming soon near little mount signal in chennai
வேற லெவலில் மாறும் சென்னை லிட்டில் மவுண்ட்... வருகிறது டபுள் டமாக்கா வசதி!


பொதுமக்கள் சிரமம்

இதில் ஒரு சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கும், மற்றொரு சாலை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி நோக்கி இரண்டாக பிரியும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் லிட்டில் மவுண்ட் சர்ச் அருகே சாலையை கடப்பதில் சிரமம் நிலவி கொண்டிருக்கிறது. இங்கு போதிய நேரம் அளிக்கப்படாததால் பொதுமக்கள் அவசர அவசரமாக சாலையை கடக்க வேண்டியுள்ளது.

நெரிசல் மிகுந்த பகுதி

இவ்வழியாக தான் அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 1.2 லட்சம் வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்வதாக அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. லிட்டில் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சிக்னல் இருந்தாலும் வாகன ஓட்டிகள் பலரும் அதை மதிப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


பெருங்களத்தூரில் செம ட்ராபிக்... திடீர் மழையால் மாட்டிக்கிட்டு தவிக்கும் வாகன ஓட்டிகள்!

சாலையை கடப்பதில் சிக்கல்

ரெட் சிக்னல் போட்டிருந்தாலும் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சாலையை கடக்க 15 முதல் 20 வினாடிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதில் பாதி சாலையை தான் கடக்க முடிகிறது. அதற்குள் சிக்னல் மாறி விடுகிறது. உடனே வாகனங்கள் விரைவாக வரத் தொடங்குவதால் அவசர கதியில் ஓடி வர வேண்டியிருப்பதாக கூறுகின்றனர்.

பயன்படுத்தப்படாத பாலம்

தற்போது தாலுகா ஆபிஸ் சாலையில் உள்ள நடை மேம்பாலம் சரியான முறையில் பயன்படுத்தப்படுவது இல்லை. மேம்பாலத்திற்கு கீழே லெவல் கிராசிங் இருப்பதால் சிக்னல் போடும் நேரத்திற்காக காத்திருந்து சாலை வழியாகவே கடந்து செல்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது முதியவர்கள், குழந்தைகளால் நடை மேம்பாலத்தில் ஏறி செல்ல முடிவதில்லை.

இரட்டை நடை மேம்பாலம்

எனவே இந்த மேம்பாலத்தை மறு சீரமைத்து எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய மாநில நெடுஞ்சாலைத் துறை லிட்டில் மவுண்ட் பகுதியில் ஏஜி சர்ச்சிற்கு அருகில் லிப்ட் வசதியுடன் கூடிய Twin Walkaway வகையிலான இருவழிப் பாதை கொண்ட புதிய நடை மேம்பாலம் கட்ட முடிவு செய்துள்ளது.


அடுத்த ரெண்டு நாட்கள்... மழையும், லீவும்... தமிழ்நாடு வெதர்மேன் சூப்பர் அப்டேட்!

விரைவில் கட்டுமானப் பணிகள்

இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இறுதி செய்து 31 லட்ச ரூபாய் செலவில் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இது செயல்பாட்டிற்கு வந்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான பயணத்தை பாதசாரிகள் மேற்கொள்ள முடியும். விபத்துகளும் பெரிதும் தவிர்க்கப்படும்.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி