ஆப்நகரம்

அறிவிப்புக்கு பிறகு வரப்போகும் பூகம்பம்? அதிமுகவின் ஏற்பாடு என்ன?

இவை அனைத்தையும் மனதில் கொண்டே இருவர் தரப்பிலும் மேல்மட்டத் தலைவர்கள் முன்னிலையில் விடிய விடிய ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அறிவிப்பின் போது இந்த சவாலை எதிர்கொள்வார்களா?

Samayam Tamil 7 Oct 2020, 8:42 am
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையிலான முதல்வர் வேட்பாளர் போட்டிக்கு இன்று முடிவு வெளியிடப்பட உள்ளது. ஆனால், அறிவிப்புக்குப் பின் கட்சிக்குள் எழப்போகும் மற்றொரு குழப்பம் குறித்து கவனிக்க வேண்டியது தற்போது அவசியமாகிறது.
Samayam Tamil O.panneer selvam edappadi palaniswami


2021ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அதிமுகவின் சார்பில் நிற்கப் போவது யார் என்பதுதான் பிரதான கேள்வி என்றாலும், வரப்போகும் முடிவின் மூலம் கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கு மற்றும் நிர்வாகிகளின் மனநிலை ஆகியவற்றை அளவிடும் அளவுகோலாகவும் இந்த அறிவிப்பு செயல்பட வாய்ப்புள்ளது.

அதுமட்டுமன்றி, அதிமுகவுக்குள் பிளவு இருக்கிறது என்பதை இரு தரப்பு தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிப்படுத்தி விட்டனர். இந்நிலையில், இனி சமரசமாகி சேர்ந்தாலும் ஒரு புகைச்சல் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இரு தரப்பும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பம். எனினும், இருவரில் யாரோ ஒருவருக்கு முதல்வர் பதவி என்று அறிவிக்கப்படுவது மற்ற பிரிவினருக்கு நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தும்.

முதலமைச்சர் பதவிக்காக கட்சியை விட்டுக் கொடுப்பதா - ஈபிஎஸ் பிளான் என்ன?

குறிப்பாக ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு என இரண்டு இரண்டு அணிகளாக மாவட்டம் தோறும் பிரிந்து செயல்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.இந்நிலையில், யாரோ ஒருவரது பிரிவுக்கு அதிருப்தி நிச்சயம். இதன் விளைவாக, தேர்தல் சமயத்தில் வேலை செய்யும்போது சுணக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்துடன், இபிஎஸ் தேர்வு செய்யும் வேட்பாளர்கள், ஒபிஎஸ் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் என தேர்தலுக்கு முன்பே பிளவுகள் வெட்டவெளிச்சமாகத் தெரியவரலாம்.

இந்த சூழலிதான், யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுக பதிலளிக்க உள்ளது. மாநிலம் முழுக்க எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பு வெளியான பிறகு, இன்னொரு பூகம்பம் வெடிக்க வாய்ப்புள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

அதாவது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதற்கு பதில் இன்று கிடைத்துவிட்டாலும், அதன்பிறகு “இவர் ஏன் முதல்வர் வேட்பாளர்? ” என்ற விவாதம் உள்கட்சிக்குள் விஷ்வரூபமெடுக்கும். இது பிராந்திய ரீதியாக தொண்டர்களிடையே மனக்கசப்பை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் பலம் என்ன?

இவை அனைத்தையும் மனதில் கொண்டே இருவர் தரப்பிலும் மேல்மட்டத் தலைவர்கள் முன்னிலையில் விடிய விடிய ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அறிவிப்பின் போது இந்த சவாலை எதிர்கொள்வார்களா? எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி