ஆப்நகரம்

கிளாம்பாக்கம்: மீண்டும் வந்த முரட்டு சிக்கல்... தள்ளிப் போகும் திறப்பு விழா!

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் திறப்பு விழா மீண்டும் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 14 Mar 2023, 8:12 am
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 2019ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனா ஊரடங்கு, தொழிலாளர்கள் பிரச்சினை, கட்டுமான வடிவமைப்பில் மாற்றம் என பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
Samayam Tamil what is the problem behind delay for opening chennai kilambakkam new bus stand by tn govt
கிளாம்பாக்கம்: மீண்டும் வந்த முரட்டு சிக்கல்... தள்ளிப் போகும் திறப்பு விழா!


​அதிகாரிகள் தொடர் ஆய்வு

இதனால் தமிழ்நாடு அரசு திட்டமிட்டபடி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க முடியவில்லை. பல மாதங்களாக தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வருகிறது. பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தி சி.எம்.டி.ஏ அமைச்சர் சேகர் பாபு, வீட்டுவசதி துறை செயலர் அபூர்வா, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் நேரில் சென்று அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

உயர் அதிகாரிகள் அதிருப்தி

இதற்கிடையில் புதிது புதிதாய் பிரச்சினைகள் கிளம்பிய வண்ணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சி.எம்.டி.ஏ கட்டுமானப் பொறியாளர்கள் மீது உயர் அதிகாரிகளுக்கு ஒருவித அதிருப்தி நிலவுகிறதாம். ஏனெனில் ஒப்பந்ததாரர்களிடம் முறையாக வேலை வாங்கவில்லை. மாநில அரசிடம் உண்மை நிலவரத்தை தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.


மாதவரம் பேருந்து நிலையம்; 50 மீட்டர் நீள பாலம்... அசத்தல் மெட்ரோ கனெக்‌ஷன் ஏற்பாடுகள்!

அலங்கார வளைவு திட்டம்

தற்போது பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் அலங்கார வளைவு அமைப்பதில் பிரச்சினை வந்து நிற்கிறது. இதற்கு மட்டும் 10.76 கோடி ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் பணிகளை முடித்து விடலாம் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால் கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் 8.28 கோடி ரூபாய் மதிப்பில் 2.45 லட்சம் கிலோ எடையில் இரும்பு பிரேம்களை பயன்படுத்த பரிந்துரை செய்தனர்.

​ஒப்பந்த நிறுவனம் நிபந்தனை

இதன்மூலம் 2.51 கோடி ரூபாய் மிச்சமாகும் எனக் கூறினர். இதற்கான உரிய திட்டமிடல்கள் மூலம் ஒப்பந்த நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இவர்கள் சில நிபந்தனைகளை விதித்தனர். முதலில் பிரதான கான்கிரீட் பணிகள், அதன்பிறகு 20 தனித்தனி பாகங்களாக அலங்கார வளைவுகளை கொண்டு வந்து இணைத்தல் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட கால அளவு என்பது ஆறு மாதங்கள்.

6 மாத காலப் பணிகள்

இங்கு தான் சிக்கலே ஆரம்பித்தது. இதன் பணிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. அப்படி பார்த்தால் ஏப்ரல் மாத இறுதியில் தான் பணிகள் நிறைவு பெறும் எனத் தெரிகிறது. இதை பாதியில் நிறுத்த முடியாது என்பதால் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.

என்னென்ன பிரச்சினைகள்?

முகப்பு பகுதியில் உள்ள அலங்கார வளைவு பணிகள் மட்டும் எஞ்சியுள்ளன. இதன் காரணமாகவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கட்டுமானத் துறையை சேர்ந்த வல்லுநர்கள் கூறுகையில், வெளிப்படையான டெண்டர் கோரப்படவில்லை. கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் சரியான முடிவை எடுக்கவில்லை.

அண்ணா நகர் டவர் பூங்கா ரெடி: 12 வருஷம் ஆச்சு... சென்னை மக்கள் செம ஹேப்பி!

​திறப்பு விழா எப்போது?

இத்தகைய செயல்பாடுகளால் தான் இழுபறி நீடித்து வருகிறது. முன்கூட்டியே இந்த விஷயங்களை சரியாக கவனித்திருந்தால் இந்நேரம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் எனக் கூறினர். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்காக சென்னைவாசிகள் குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி