பொங்கலுக்கு ரெடியாகி விடும்
நிலைமை சீரடைந்ததும் பணிகள் முடுக்கி விடப்பட்டு வேகமெடுத்தன. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை கடந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
எனவே திறப்பு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுபற்றி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் சாமிநாதன், வரும் பொங்கல் பண்டிக்கைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
தென் மாவட்டப் பயணம்
அடிப்படை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கின்றன. மின் இணைப்பு போன்ற சிறிய பணிகள் மட்டுமே மிச்சமுள்ளன எனத் தெரிவித்தார். இது சென்னைவாசிகளை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனிமேல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. சென்னையில் எங்கிருந்தாலும் நேராக கிளாம்பாக்கத்திற்கு பஸ் ஏறிவிடலாம்.
நீல வழித்தடம் நீட்டிப்பு
இதற்காக சிறப்பு பேருந்துகளை புதிய வழித்தடங்களில் இயக்க மாநகரப் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் மற்றொரு முக்கியமான விஷயம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. அதுதான் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் வசதி. கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைவதை ஒட்டி, சென்னை மெட்ரோ ரயிலின் நீல வழித்தடம் நீட்டிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
மொத்தம் 12 ரயில் நிலையங்கள்
அதாவது, விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா விலங்கியல் அருங்காட்சியகம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய ரயில் நிலையங்கள் வரவுள்ளன.
தமிழக அரசின் ஒப்புதல்
15.3 கிலோமீட்டர் தொலைவில் நீட்டிக்கப்படும் வழித்தடத்தில் 12 ரயில் நிலையங்கள் அமைகின்றன. இதற்கான செலவு 4,080 கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதுதொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2018ல் தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலங்கள் வருவதால், அந்த துறையின் ஒப்புதல் பெற்று திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
பணிகள் எப்போது தொடங்கும்?
தமிழக அரசு அரசாணை பிறப்பித்த உடன் முறையாக டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வரும் 2026ஆம் ஆண்டிற்குள் விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்பு பணிகள் முடிந்து ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் எப்போது பணிகள் தொடங்கும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.