ஆப்நகரம்

இரவா, பகலா? - நிவர் புயல் கரையை கடப்பது எப்போது - அமைச்சர் விளக்கம்!

நிவர் புயல் எப்போது கரையை கடக்கும் என்பது குறித்து தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 25 Nov 2020, 7:52 pm
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
Samayam Tamil அமைச்சர் உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு


நிவர் புயல் வரும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க 32 மாவட்டங்களிலும், சென்னையின் 15 மண்டலங்களிலும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரவு பகலாக கட்டுப்பாட்டு மையமம் இயங்கிவருகிறது. இந்த மையத்தில் இருந்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் பழைய கட்டிடங்களில் உள்ளவர்கள் அரசின் நிவாரண மையத்திற்கு வர வேண்டும். அரசு சார்பில் 4,733 முகாம்களில் மொத்தம் 13 லட்சம் பேர் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 987 முகாம்களில் 24,166 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 8 குழுவினர் 2 படகுகளுடன் சென்னை வர உள்ளனர்.

நிவர் புயல் எதிரொலி: 24 விமான சேவைகள் ரத்து!

பாசன ஏரிகளில் 1,579 ஏரிகள் கொள்ளளவை எட்டியுள்ளன. அவை 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருகின்றன. மேட்டூர், பூண்டி, பாவனி சாகர், செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை பாதுகாப்பாக உள்ளன.

சென்னையில் 53 இடங்களில் நீர் தேங்கியிருந்தது. அதில் 8 பகுதிகளில் நீர் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது. மீதம் உள்ள 45 இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயல், சூறாவளி நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து சில நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். அதனால் மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

chembarambakkam lake open:செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு...சென்னைக்கு வெள்ள அபாயம்?

புயலின் கண் பகுதி கடக்கும் முன் சில நேரங்களில் வேகம் குறைந்து அமைதியாக காணப்படும். அதனால் புயல் கடந்துவிட்டது என எண்ண வேண்டாம். அரசு அதிகார பூர்வமாக புயல் கடந்துவிட்டது என அறிவிக்கும் வரை மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்..

புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல் IMD இணையதளம் மற்றும் ஊடங்கங்களில் வரும் அந்த தகவல்களை மட்டும் மக்கள் நம்ப வேண்டும்.

நிவர் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்: தொடரும் அதி கனமழை -அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

25 ஆம் தேதி இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் 26 ஆம் தேதி காலை புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வருகிறது. இதனையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த புயலை வெற்றிகரமாக கடந்து செல்வோம்.

தற்போது சென்னைக்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி