ஆப்நகரம்

சென்னையின் 16 வருஷ கனவு... மீண்டும் ஒரு சிக்கல்- ஆனாலும் வந்தது நல்ல சேதி!

டபுள் டெக்கர் வடிவமைப்பில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்படுவது குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 7:43 am
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக லாரிகள், கண்டெயினர் லாரிகள் மூலம் பொருட்கள் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் தலைநகரில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருப்பதை கருத்தில் கொண்டு இரவு 10 மணிக்கு மேல் சரக்கு லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil when will work starts for chennai port to maduravoyal four lane elevated corridor project
சென்னையின் 16 வருஷ கனவு... மீண்டும் ஒரு சிக்கல்- ஆனாலும் வந்தது நல்ல சேதி!


மதுரவாயல் பறக்கும் சாலை

அதேசமயம் காலை வேளைகளில் வேறு வழியில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் 2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி சிந்தனையில் உதித்த திட்டம் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். 2007ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கூவம் ஆற்றங்கரையோரம் 19 கிலோமீட்டர் தூரத்திற்கும், மதுரவாயல் பகுதியிலும் தூண்கள் அமைக்கப்பட்டன.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

ஆனால் அதன்பிறகு 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பறக்கும் சாலை திட்டத்தை கிடப்பில் போட்டது. கூவம் ஆற்றின் நீர்ப் பகுதியில் தூண்கள் அமைத்தால் நீர் செல்ல இடையூறு ஏற்படும் போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை மாறி, மாறி நடைபெற்றன. இதனால் 16 ஆண்டுகள் தூண்கள் மட்டும் நின்ற படியே இருக்கின்றன. அதன்பிறகான வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.


கிளாம்பாக்கம்: இப்படியொரு புது ரூட்; அப்டினா வேலை செம ஈஸியா முடிஞ்சிடும்!

மீண்டும் அடிக்கல்

”நாங்க சின்ன வயசுல பார்த்தப்போ எப்படி இருந்துச்சோ, இன்னும் அப்படியே தான் இருக்குது” என்று 2K கிட்ஸ் கலாய்க்கும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பறக்கும் சாலை திட்டத்தை முடிப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது. அதே மாதம் பிரதமர் மோடி அடிக்கலும் நாட்டினார்.

டபுள் டெக்கர் சாலைகள்

அதன்படி, 20.56 கிலோமீட்டர் தூரத்திற்கு 5,855 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இரண்டு அடுக்குகளில் 4 வழிச் சாலைகள் கொண்ட மேம்பாலமாக செல்லும். முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் 6 வழிச் சாலை அமைகிறது. இந்த சாலை இடையில் இறங்கவும், ஏறவும் என ஆங்காங்கே தரை வழிச் சாலைகளுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது.

வரும் டிசம்பரில் தொடக்கம்

இரண்டாவது அடுக்கில் துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை எங்கும் நிற்காமல் செல்லும் வகையில் 4 வழிச்சாலையாக அமையவுள்ளது. இதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சூழலில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.


Aerocity: பரந்தூரை சுற்றி வரப் போகும் பிரம்மாண்டம்... மெர்சலாக்கும் CII ஐடியா!

புதிய சிக்கல்

24 முதல் 36 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு தனியாக குடியிருப்புகள் கட்டித் தந்தால் தான் நிலம் வழங்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வு கண்டு விட்டால் பணிகள் விறுவிறுப்படையும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி