ஆப்நகரம்

கோவையில் அமையும் மாநிலத்தின் மிக நீளமான மேம்பாலம்.... சில சுவாரஸ்ய தகவல்கள்!

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைப்பது அவசியமான அம்சமாக உள்ளது.

Samayam Tamil 4 Dec 2020, 6:35 pm
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைப்பது அவசியமான அம்சமாக உள்ளது. மேம்பாவங்கள் அமைக்கப்படுவதன் பயனாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நகருக்குள் சென்று வருவதற்கான காலவிரயம், போக்குவரத்து அலைச்சல், எரிபொருள் விரயம் என பலவற்றை தவிர்க்க முடிகிறது. இதனை கருத்தில் கொண்டு கோவை -அவினாசி சாலையில் பிரம்மாண்டமான மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இப்புகைப்பட கட்டுரை.
Samayam Tamil all you know about longest flyover in tamil nadu which comes in coimbatore
கோவையில் அமையும் மாநிலத்தின் மிக நீளமான மேம்பாலம்.... சில சுவாரஸ்ய தகவல்கள்!


சிக்னல்களால் சிக்கல்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த சாலைகளில் அவினாசி சாலையும் ஒன்று. இந்த சாலையில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் சிக்னல்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. தொழில் நகரமான கோவையின் விமான நிலையம் இந்த சாலையில் அமைந்துள்ளதால், போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, இந்த சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக இருந்து வந்தது.

தமிழகத்திலேயே மிக நீ்ண்ட மேம்பாலம்

தொழில் துறையினரின் நீண்டகால இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு கொஞ்சம் தாமதமாக செவி சாய்த்தாலும், கோவை அவினாசி சாலையில் அமையவுள்ள மேம்பாலம் தமிழகத்தில் இதுவரை வேறெங்கும் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக கட்டப்படவுள்ளது. எந்த அளவுக்கு பிரம்மாண்டமென்றால், தமிழகத்திலேயே மிக நீண்ட மேம்பாலமாக இது அமையவுள்ளது. மொத்தம் 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த மேம்பாலம் கட்டப்படவுள்ளது.

நீள, அகலம் எவ்வளவு?

மொத்தம் 10.10 கிமீ நீளத்திற்கு அமையவுள்ள இந்த பாலம் 17.25 மீ அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அமையவுள்ளது.நான்கு இடங்களில் ஏறுதளமும், நான்கு இடங்களில் இறங்கு தளமும் 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமையவுள்ளது. மேலு்ம் 10.50 மீட்டர் அகலத்தில் இருபுறமும் சேவை சாலையும், 1.5 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமையவுள்ளது.

எங்கிருந்து எதுவரை?

உப்பிலிபாளையம் சந்திப்பு பகுதியில் துவங்கி சித்ரா கோல்டுவின்ஸ் வரை இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. மாநிலத்திலேயே மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையுடன் கட்டப்படவுள்ள இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது கோவை விமான நிலையம், அவினாசி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளி்ட்ட இடங்களுக்கு பயணி்ப்போர் போக்குவரத்து நெரிசலில் பல மணிநேரம் சிக்காமல் எளிதில் சென்றுவர முடியும்.

பூமி பூஜை

கோவை -அவினாசி சாலையில் கட்டப்படவுள்ள மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகளை பூமி பூஜை போட்டு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலம் கட்டுமான பணி விரைவில் துவங்கவுள்ளது.

அடுத்த செய்தி